ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழைக்கு தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 150க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 800 ஹெக்டேர் விவசாய நிலங்களும் சாலைகளும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ள சேதம் குறித்து ஆப்கானிஸ்தான் இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானின் பருவமழைக்கு ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி கடந்த 3 நாட்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்கு ஆப்கானிஸ்தானின் 34 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது எனக் கூறினார்.




















