சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக் உருவாக உள்ளதாகவும், அதில் நடிகர் விஷால் அண்ணாமலை கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் என பலரது வாழ்க்கை வரலாறும் சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் ‘யாத்ரா 2’ என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு, பயோபிக் ஆக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா சார்ந்த தகவல்களை அளிக்கும் யூடியூப் தளம் ஒன்றில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் ஆன பிறகு தினந்தோறும் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். பேச்சு, பேட்டி என பரபரப்பாக இயங்கி வரும் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தற்போது தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில் தான் அண்ணாமலையின் பயோபிக் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றினார். அண்ணாமலை எப்படி போலீஸ் அதிகாரி ஆனார்.. அதன்பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார்.. அரசியலுக்கு நுழைந்து அவர் செய்த விஷயங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அண்ணாமலையின் பயோபிக் எடுக்கப்பட உள்ளதாம்.
அண்ணாமலையின் பயோபிக்கில் அவரது கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஷால் கிட்டத்தட்ட அண்ணாமலை போலவே இருப்பதால் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விஷால் கிட்டத்தட்ட படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக அந்த யூடியூப் தளத்தில் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்து வருகிறார்.
ஏற்கனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போதே அவர் வேட்பு மனு தாக்கல் செய்து, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அண்மையில் கூட நான் அரசியலுக்கு வருவது உறுதி, கண்டிப்பாக வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, மாணவர் ஒருவர், “ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா?” எனக் கேள்வி எழுப்ப, அதற்கு முதலில் திகைத்த நடிகர் விஷால் சட்டென, “ஐபிஎஸ்” என பதில் அளித்தார். விஷால் அப்படிச் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. பின்னர் தொடர்ந்த விஷால், “நான் வணங்கும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு சல்யூட்” என்றார்.
மேலும், “என் நண்பன் பெயர் ஐ.பி.செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐபிஎஸ் தான்” எனத் தெரிவித்தார். விஷால் ஐபிஎஸ் என முதலில் சொன்னது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தா? அல்லது திமுக எம்.எல்.ஏ ஐபி செந்தில் குமார் பற்றியா என சமூக வலைதளத்தில் சூடான விவாதமே நடந்தது. இந்த நிலையில், விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் பேசு பொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். விஷால், “ஐபிஎஸ்” என சொன்னது அப்போ புரியல.. இப்போ புரியுது என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



















