உதவி தேவைப்படுவோருக்கு லெஜண்டரி ரைடர்ஸ் கிளப் கரம் நீட்டும்

நாடறிந்த அதிவேக மோட்டார் சைக்கிள் குழுவான  லெஜண்டரி ரைடர்ஸ் கிளப் அண்மையில் காஜாங் ஜாலான் ரெக்கோ, தாமான் ஸ்ரீ லங்காட்  பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இவர்களுடன் லெஜண்டரி ரைடர்ஸ் மலேசியா ஷேடோ ஃபெக்ஸ், ஈகள் பைக்கர்ஸ் மலேசியா, மிஸ்டர் பைக்கர்ஸ், ஊல்ஃவ் பேக் ரைடர்ஸ், பிரிக் சிட்டி ரைடர்ஸ் ஆகியோரும் கரம்  இணைந்துள்ளனர்.

முன்னதாக இந்த வெள்ளம் ஏற்பட்ட உடனே தகவல் அறிந்து நாங்கள் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை  வழங்கினோம். அதன் பின்னர் சமையல்  பொருட்களையும் வழங்கினோம் என கிளப் தோற்றுநர் மகேந்திர மணி ராகவன் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பி40  பிரிவினர் தங்கள் வீடுகளில் இருந்த மின்சாதனப்  பொருட்கள் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக எங்களிடம் முறையிட்டனர். குறிப்பாக ஒரு சில வீடுகளில் சமைப்பதற்கான கருவிகளும் தளவாடங்களும் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

எனவே, அவர்களின் நிலை அறிந்து நாங்கள் மீண்டும் உதவி செய்ய முற்பட்டோம். அப்பகுதியில் வசிக்கும் பி40 தரப்பு குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க முனைந்தோம். தொடக்கத்தில் 20 குடும்பங்களுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், எங்கள் கிளப் உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் கூடுதலாக 5 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக மின்சார  (ரைஸ் குக்கர், கேத்தல்) பொருட்கள், சமையல் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கினோம். இதில் எங்கள் கிளப்பின் தலைவர் அஷ்ராப் முஹிடின் தலைமையேற்று பொருட்களை எடுத்து வழங்கினார்.

இந்தியர்கள் மட்டுமல்லாது அனைத்து இனத்தையும் சேர்ந்த பி40 பிரிவினருக்கு நாங்கள் இந்த உதவிப் பொருட்களை வழங்கினோம். அதுமட்டுமன்றி இந்த பகுதியில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு தலா 300 ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்களையும் வழங்கினோம் என்றார் மகேந்திரன்.

இதனிடையே, எங்கள் மோட்டார் சைக்கிள் குழு பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.  சுற்றுப்பயணம் மட்டுமன்றி சமூக நல உதவிகளையும் நாங்கள் அவ்வப்போது செய்து வருகின்றோம். அண்மையில்தான் ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்கள் பதிவிலாகாவின் கீழ் எங்கள் கிளப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கிளப் என்ற பெருமையையும் நாங்கள் கொண்டுள்ளோம் எனவும் மகேந்திரன் விவரித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here