இந்தியா கூட்டணியில் குழப்பம் இல்லை.. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார்.. திருமாவளவன் பதிலடி

சென்னை: அண்மைக் காலமாக பிரதமர் மோடி பேசி வருவது, பாஜகவின் தோல்வி பயத்தை உணர்த்துகிறது. இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை, பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார்” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆறு கட்டங்களாக 488 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தக்கூடிய அரசாக பாஜக அரசு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சூழலில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் சமூகத்தினர் ஒற்றுமை முக்கியமானது.

இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகவும், பகுஜன் ஒற்றுமைக்காகவும் செயல்பட்ட முன்னால் பிரதமர் விபி சிங், கன்ஷி ராம், மண்டல் போன்றவர்களை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

மேலும் பேசிய அவர், ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் பிரதமர் ஆற்றுகின்ற உரை மூலமாக மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதை உணர முடிகிறது. பிரதமர் அண்மைக்காலமாக பேசி வருகிற கருத்துகள் அவர் மிகவும் பதட்டத்திலும் தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

குறிப்பாக இந்து சமூகத்தின் நிலை குறித்தும் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி சொன்னதையும் அடுத்தடுத்து அமித் ஷா போன்றவர்கள் பேசி வருகிற கருத்துகளையும் பார்த்தால் அவர்கள் ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆகவே ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கின்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்” என்த் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் இலக்கு இல்லை குழப்பம் தான் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து குறித்து பதில் அளித்த திருமாவளவன், இந்தியா கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அவர் தான் குழப்பத்தில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என பிரதமர் கூறுகிறார். ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பது என்ன தவறு? ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை. அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

காங்கிரஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்று கனவு காண்பவர்களை நாடு சகித்துக்கொள்ளாது என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களின் போது பேசி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே கருத்தை தனது தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here