கோலாலம்பூர்:
இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் 34 வயது இந்தியப் பிரஜை ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை (மே 20) சம்பவம் நடந்ததாகவும், அது குறித்து தனது மகள் தன்னிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் துணை கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் நேற்று (மே 26) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை பாண்டான் இண்டாவிலுள்ள ஓர் உணவகத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, குறித்த உணவகத்தில் உணவு பரிமாறுபவராக பணிபுரிந்த குறித்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக ஏசிபி முகமட் அஸாம் தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் போதைப்பொருள் எதுவும் பாவிக்கவில்லை என்றும் அவருக்கு முந்தைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
விசாரணைக்கு உதவும்வகையில் சந்தேக நபர் மே 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி முகமட் அஸாம் மேலும் தெரிவித்தார்.




















