சென்னை: அரசியல் வருகைக்கு பிறகு தாய்- தந்தையை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று என்ற கேப்ஷன் இட்டு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார்.
2011 ஆம் ஆண்டு முதலே விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கங்களாக மாறிவிட்டன. அப்போதே விஜய் மக்கள் இயக்கத்திற்கான கொடியை அறிமுகப்படுத்திவிட்டார். இதைத் தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்த விஜய் தற்போது தனது அரசியல் வருகையை உறுதி செய்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே 234 தொகுதிகளிலும் தமிழ் புத்தாண்டு அன்று அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.
அது போல் கடந்த ஆண்டு மே 28-ஆம் தேதி உலக பட்டினி தினத்தன்று மதியம் ஒரு வேளை உணவையாவது அன்னதானம் செய்யுமாறு விஜய் உத்தரவிட்டிருந்தார். அது போல் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நாளை பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் செய்ய தனது கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அது போல் இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார். கடந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கொடுக்க கிட்டதட்ட 11 மணி நேரம் எந்த களைப்பும் இல்லாமல் நின்றபடியே விஜய் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வந்தார்.
விஜய் இத்தனை நல்லது செய்தாலும் அவர் தனது தாய், தந்தையை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு முறை சந்திரசேகரின் பிறந்த நாளன்று கூட தன்னை மகன் வந்து பார்க்கவில்லை என்பதை எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லாமல் சொல்லியிருந்தார். அண்மையில் மதர்ஸ் டே அன்று விஜய் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் தனது மகள் வித்யா இல்லையே என்று ஷோபா சந்திரசேகரன் ஒரு யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் வருந்தினார். அப்போது செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது இறந்த மகளுக்கு உயிர் கொடுத்து வரவழைக்கப்பட்டது. இதை கண்டு ஷோபா நெகிழ்ச்சி அடைந்தார். அது போல் விஜய் மீது ஷோபாவுக்கு அதிக பாசம்.
அந்த வகையில் இன்றைய தினம் தனது தாய், தந்தையை நடிகர் விஜய் சந்தித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எங்கே என்பதெல்லாம் தெரியவில்லை. இன்று என குறிப்பிட்டு சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
























