உண்மையான பக்தனுக்கான தகுதிகள்

எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும், மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்வதாகவும், மனிதர்களை நல்வழிபடுத்துவதற்காகவும் தெய்வம் மனிதனுக்கு அளித்த உபதேசமே பகவத் கீதையாகும். பக்தி, சேவை, தியாகம், மறுபிறவி, இன்பம் என பகவத்கீதையில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. அப்படி பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையான பக்தனாக இருப்பதற்கு ஒருவனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என சொல்லி உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான பக்தனுக்கான தகுதிகள் :
கோபம் இருக்கக் கூடாது :
பற்றுள்ள மனதால் கோபத்தை வெல்ல முடியாது. மகிழ்ச்சியை தரும் ஆசைகள் தான் நினைத்தபடி நடக்காத போது அல்லது தடை ஏற்படம் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம் ஏற்படுகிறது. எதன் மீதும் பற்று இல்லாமல், இறைவனிடம் முழுவதுமாக தன்னை ஒப்படைத்து சரணடையும் போதும் கோபத்தில் இருந்து விடுபட முடியும்.
உணர்வுகளை அடக்குவது :
உணர்ச்சிகள், மனதை அதன் போக்கில் இழுத்துக் செல்லக் கூடியவை. பற்றின் காரணமாக அவைகள் மாயையில் மூழ்க வைப்பவை. மனிதர்களை எளிதில் ஈர்த்து, சிற்றன்பத்தில் ஆழ்த்தும் இவற்றில் இருந்து விடுபட்டு, இறைவனின் பாதையில் செல்வது அவசியம்.
மனத்தூய்மை :
எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள் உள்ளிட்ட அனைத்திலும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இது நேர்மையாக, நல்ல வழியில் நம்மை வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்யும். எண்ணம், செயல், பேச்சு என அனைத்தும் தூய்மை அடையும் போது, மனம் தானாக தூய்மை அடைகிறது.
தானம் :
ஒரு நல்ல காரியத்திற்காக அல்லது தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து நம்மிடம் இருப்பதை கொடுத்து உதவ வேண்டும். அப்படி வழங்கப்படும் தானம் பெயர், புகழ் ஆகியவற்றை எதிர்பார்த்து இல்லாமல் , இறைவனுக்கு தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்ய வேண்டும். ஆன்மிக தொண்டு என்பது ஆன்மாவிற்கு செய்யப்படுவதாகும். இது துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, ஆத்ம இன்பத்தை உண்டாக்கக் கூடியதாகும்.
தியாகம் :
வேதக் கடமைகள், சமூகக் கடமைகள் ஆகியவற்றில் இன்பத்தை உணரவில்லை என்றாலும் தன்னை ஈடுபடுத்துக் கொள்ள வேண்டும். இறைவனின் விருப்பம் என நினைத்து ஒரு விஷயத்தை தியாகம் செய்யும் போது அது பரிபூரணத்துவத்தை பெறுகிறது.
ஏற்றுக் கொள்ளல் :
உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றை அதன் போக்கில் விட்டால் அது பாதுகாப்பை தேடும். இன்பத்தை வேண்டும். ஆனால் அதை கட்டுக்குள் வைத்தால் அது ஒழுக்கமானதாக மாறும். மனம், உடல், எண்ணம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்படும் துன்பங்களை தானாக ஏற்றுக் கொண்டு, சகிப்புடன் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here