இலங்கையில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி

கொழும்பு:

பருவக்காற்று காரணமாக இலங்கையில் பெய்த கனமழையை தொடர்ந்து, அங்கு திடீர் வெள்ளம், மண்சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள் காரணமாகக் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மையம் நேற்று (ஜூன் 2) தெரிவித்துள்ளது.

தலைநகர் கொழும்பு அருகே அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் 11 வயது சிறுமி, 20 வயது இளைஞன் உட்பட மற்றவர்கள் மண்சரிவில் உயிருடன் புதையுண்டதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மே 21ஆம் தேதி பருவமழை தீவிரமடைந்தது முதல் அங்குள்ள ஏழு மாவட்டங்களில் மரங்கள் விழுந்ததில் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

நீர்ப்பாசனம், நீர்மின்சாரத்திற்காக இலங்கை பருவமழையை நம்பியிருக்கும் அதேவேளையில், காலநிலை மாற்றம் காரணமாக உலகம் வெப்பமடைந்து வரும் சூழலில், இலங்கை அடிக்கடி வெள்ளப்பெருக்கைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் டிஎம்சி தெரிவித்துள்ளது.

கொழும்பின் முக்கிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் சிறிய விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் சில முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

தொடர்ந்து மழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் டிஎம்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here