மும்பை:
மும்பையில் மருத்துவர் ஒருவர் இணையம் வாயிலாக வாங்கிய ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள மலாட் வட்டாரத்தில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ், 27, என்ற மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வாங்கிய ‘பட்டர் ஸ்காட்ச்’ ஐஸ்கிரீமை சாப்பிட்ட போது ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார்.
ஐஸ்கிரீமை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதனுள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த ஐஸ்கிரீமை அப்படியே எடுத்துக் கொண்டு சென்று மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக தனியார் உணவு விநியோக நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஐஸ்கிரீமை விசாரணைக்கும் மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.
உணவுப் பொருளில் உடல் உறுப்பு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.




















