துபாய்: குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலர் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 48 பேர் பலியாகியுள்ளனர். இதில் 42 பேர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய விமானப்படையின் விமானம் தயாராக இருக்கிறது என மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “தீ விபத்தில் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருக்கிறது. எனவே டிஎன்ஏ பரிசோதனையில் உடல்களை அடையாளம் காண திட்டமிட்டிருக்கிறோம். அடையாளம் காணப்பட்டவுடன் அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்திய விமானப்படையின் விமானம் உடல்களை கொண்டுவர தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
மங்காஃப் மாவட்டத்தில் இருந்த 6 கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலிண்டர் வெடித்ததன் மூலம் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து நிகழ்ந்த கட்டிடம், கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமானதாகும். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
அதேபோல தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா, இதுபோன்ற தீ விபத்துக்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேபோல, உயிரிழந்தவர்களை பொறுத்த அளவில், 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வேண்டியிருக்கிறார். இந்த தீ விபத்து தொடர்பாக வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யஹ்யாவுடன் பேசியுள்ளார்.
விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு பிரச்னைகள் சரி செய்யப்படும் என்றும் குவைத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களை இந்தியா கொண்டுவருவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள +965-65505246 என்ற உதவி எண்ணை அறிவித்திருக்கிறது.



















