நியூயார்க்:
அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. அதன் முதல் வாரயிறுதியில் மிதமிஞ்சிய வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஆறு நாள்களாக அமெரிக்காவின் பல பகுதிகளில் சூடான வெப்பநிலை காணப்படுகிறது.
குறிப்பாக, சனிக்கிழமை (ஜூன் 22) பதிவான வெப்பம், வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைக் கடந்துவிட்டது.
பால்டிமோர் வட்டாரத்தில் ஆகக் கடைசியாக 1988ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பம் 37.7 டிகிரி செல்சியசாகப் பதிவாகி இருந்தது. அதன் பிறகு சனிக்கிழமை அது 38.3 டிகிரி செல்சியசுக்கு முதல்முறை அதிகரித்தது.
வெர்ஜினிய மாநிலத்தின் டல்லஸ் நகர் அருகே 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 1988ஆம் ஆண்டு அங்கு பதிவான அன்றாட வெப்பநிலையான 37.2 டிகிரி செல்சியசை அது மிஞ்சியது.
மிட்வெஸ்ட், ஒஹையோ பள்ளத்தாக்கு வட்டாரங்களிலும் வெயில் கொளுத்தியது.
அதிகபட்ச வெப்பநிலை மின்தடை ஏற்படும் அபாயத்தை அதிகரித்து உள்ளது.
மான்ஹாட்டனிலும் இன்டியானாபொலிஸ், சின்சினாட்டி போன்ற நகரங்களிலும் உள்ள குடியிருப்பாளர்கள் வெப்பம் தொடர்பான சுகாதாரச் சீர்கேட்டை அதிகம் எதிர்நோக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரப்பதத்தைக் கவனத்தில் கொண்டு வெப்பநிலையை உணர்வதற்கான அளவுகோல் வெப்பக் குறியீடு. சனிக்கிழமை பிற்பகலின் தொடக்கத்தில் ஃபிலடெல்ஃபியா, டம்பா, ஃபுளோரிடா போன்ற இடங்களில் வெப்பக் குறியீடு 37.7 டிகிரி செல்சியசைக் கடந்தது.





















