கோலாலம்பூர்:
ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. எல்லா நிலைகளிலும் பள்ளிக்குத் துணையாய் நிற்கின்ற அவர்களையும் அங்கீகரிக்கலாமே!
இதனை நனவாக்கும் வகையில், “அர்ப்பணிப்புக்கு ஓர் ஆராதனையும் முன்னாள் மாணவர்கள் சங்கமமும்” எனும் தலைப்பில், ரவுப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 70ஆம், 80ஆம், 90ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சிறப்பிக்கப்படவுள்ளார்கள்.

வரும் 14/7/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை பள்ளி மண்டபத்தில் நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சியை ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி. வே.இராஜகோபால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவரான டி.எஸ்.பி. இராஜகோபால் இந்நிகழ்ச்சியில் முதன்மை பிரமுகராகக் கலந்து கொள்வதில் பள்ளி நிர்வாகம் பெருமிதம் அடைவதாக தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பள்ளிப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் உரை, அவர்களின் நீங்காத நினைவுகள் பகிர்வு, நினைவுச் சின்னம் வழங்குதல், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்தல் போன்ற அங்கங்கள் இடம்பெறுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும், பெற்றோரும், சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு தலைமையாசிரியர் இல.கருணாநிதியும், பெ.ஆ.ச.தலைவர் ஐ.சண்முகநாதனும் அழைக்கின்றனர்.
























