சிறுவனுக்கு தலையில் ஸ்டேப்ளரால் 14 தையல்.. போலி மருத்துவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்னொரு மருத்துவரின் முறையான மருத்துவ படிப்பின்றி பனிரெண்டு ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தையல் போட தெரியாத நிலையில் சிறுவனின் தலையில் ஸ்டாப்ளர் பின்னால் தையல் போட்டதால், மேலும் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் வெளியானதை அடுத்து அவர் சிக்கி இருக்கிறார்.

போலி அதிகாரிகள், போலி போலீஸ் உள்ளிட்ட டுபாக்கூர் நபர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் போலி மருத்துவர்கள். ஒரு உயிருக்கு பிரச்சினை என்றால் உடனடியாக மக்கள் நாடிச் செல்வது மருத்துவர்களை தான். ஆனால் தமிழகத்தில் பல பகுதிகளில் போலி மருத்துவர்கள் உலாவி வருகின்றனர். மருத்துவமனைகளுக்கு சென்றால் அதிக அளவில் பணம் கறப்பார்கள் என்ற பீதியின் காரணமாகவும் உடனடியாக கேட்டுவிடும் ராசியான மருத்துவர் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக பல டுபாக்கூர் மருத்துவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்து வருகிறார்கள்.

எம்பிபிஎஸ் என போர்டு வைத்து விட்டால் போதும் வாடிக்கையாளர்கள் தானாக வருவார்கள் என நினைக்கும் மோசடி கும்பல்கள் தமிழகத்தில் ஏராளம். பத்தாம் வகுப்பு கூட தாண்டாத பலரும் மருத்துவர்கள் என கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து அடிக்கடி சோதனை நடத்தி போலி மருத்துவர்கள் கைது செய்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்களது அட்டூழியத்தை ஒரே அடியாக நிறுத்தி விட முடியவில்லை. சில நேரங்களில் உயிரோடு விளையாடும் மருத்துவர்கள் ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் தான் அவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தென்காசியில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் கோயில் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகனான கௌஷிக் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பள்ளிக்குச் சென்றபோது சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரது தலையில் பலத்த அடிபட்டது.

இதை அடுத்து அப்பகுதியில் இயங்கி வரும் சூர்யா ஹாஸ்பிடல் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் அமிர்த லால் என்பவர் சிறுவனின் தலையில் தையல் போடுவதற்கு பதிலாக ஸ்டாப்ளர் மூலம் 14 இடங்களில் பின் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கட்டுப்போட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார் மருத்துவர் அமிர்த லால். ஆனால் சிறுவனுக்கு தலையில் வலி அதிகமானதோடு தலையிலும் சீழ் வைத்துள்ளது. இதை அடுத்து அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது கட்டை அவிழ்த்து பார்த்த போது அடிபட்ட இடத்தை சுத்தம் செய்யாமல் மண் துகள்களும் ஸ்டாப்ளர் பின் அடித்ததால் புண்ணும் உண்டாகி இருந்தது. இதை அடுத்து ஸ்டாப்ளர் பின்களை அகற்றிய மருத்துவர்கள் , தையல் போட்டு சிறுவனுக்கு கட்டு போட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்காசி சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில் அமிர்த லால் போலி மருத்துவர் என்பதும் முறையான மருத்துவ படிப்பின்றி 12 ஆண்டுகளாக ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

இதை அடுத்து அச்சன்புதூர் காவல்துறையினர் போலி மருத்துவரான அமிர்த லாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமிர்ததாலின் சூர்யா மருத்துவமனை லைசன்ஸ் வாங்குவதற்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாபு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. எனவே பாபு மீதும் குற்றம் இருக்கும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here