குவாந்தான்:
பெக்கானில் உள்ள தானா மேரா ஒராங் அஸ்லி கிராமத்திற்கு அருகிலுள்ள சுங்கை பஹாங்கில் படகில் இருந்து தவறி விழுந்ததில் காணாமல் போனதாக நம்பப்படும் பதின்ம வயது சிறுவன் இன்று நீரில் மூழ்கி , உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
முஹமட் டேனியல் ஃபக்ருல்லா முகமட் அஸ்ரி (17) என்ற பாதிக்கப்பட்டவரின் சடலம், இன்று காலை 11.44 மணியளவில் ஆற்றில் மிதந்தபோது கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“அவர் படகிலிருந்து தவறி விழுந்ததாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பெக்கானின் கம்போங் தஞ்சோங் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும் அடுத்த நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
கடந்த சனிக்கிழமையன்று ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது படிவம் ஐந்து மாணவர் காணாமல் போனதாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





















