கோலாலம்பூர்:
பினாங், ஜார்ஜ்டவுனில் உள்ள எஸ்.எம்.டெக்னிக் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் அவர்களுக்கு உணவு விஷமாகி, பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜூலை 12 அன்று பள்ளி சிற்றுண்டிச் சாலையில் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை 496 மாணவர்கள் மற்றும் இரண்டு வார்டன்கள் சாப்பிட்டதாக பினாங்கு சுகாதாரத் துறை ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988ன் கீழ் குறித்த பள்ளிச் சிற்றுண்டிச் சாலையின் சமையலறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.
மேலும் உணவின் மாதிரிகள் ஆய்வக சோதனைகளுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் அது கூறியது.
இந்நிலையில், பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் ஜி சென் கூறுகையில், பாதிக்கப்பட்ட 28 மாணவர்களும் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) உடல்நிலை சீரான பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்றார்.



















