249 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கும் முதலை நிபுணருக்கு தண்டனை விதிப்பு ஒத்திவைப்பு

‘முதலை’ நிபுணரான ஆடம் பிரிட்டன், நாய்களை சித்திரவதைச் செய்து பாலியல் வன்கொடுமைகளை செய்ததற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்படவிருந்தது. ஆனால் ஜூலை 11ஆம் தேதி அவரது வழக்கறிஞர், பிரிட்டனின் வருத்தம் தெரிவிக்கும் மனுவைத் தாக்கல் செய்ததால் தண்டனை விதிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 52, விலங்குகளை துன்புறுத்தியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் காணொளிகளை வைத்திருந்தது உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

ஜூலை 11 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் விசாரணை நடைபெற்றபோது விலங்கு உரிமை ஆர்வலர்கள் பலர் இருந்தனர் என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி தெரிவித்தது. ஒரு மனோவியல் நிபுணரிடமிருந்து முப்பது மணி நேர சிகிச்சை பெற்ற பிறகு பிரிட்டனின் வருத்தம் தெரிவிக்கும் மனுத் தயாரிக்கப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார். சிறு வயதில் ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்ட மனிதர். இது, அவருடைய தவறு இல்லை என்று பிரிட்டனின் வழக்கறிஞர் வாதிட்டார்.

குற்றச்செயல்கள் நடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பிரிட்டன் ‘பாரபிலியா’ என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது பிரதிநிதிகள் கூறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன. இது, வித்தியாசமானதாகக் கருதப்படும் இடங்கள், பொருள்கள், சூழ்நிலைகளில் தீவிரமான பாலியல் கற்பனைகளை அனுபவிக்கும் நிலையாகும். 2023 செப்டம்பரில் நடந்த விசாரணையில் பிரிட்டன் 2014ஆம் ஆண்டிலிருந்து தனது நாய்களை பாலியல் வன்கொடுமைகளைச் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

‘கம்டிரீ’ இணையத்தளத்தின் வழியாக உரிமையாளர்களிடமிருந்து 42 நாய்களை அவர் பெற்றிருந்தார். பின்னர் நாய் குட்டிகளை பாலியல் பலாத்காரம் செய்து அது தொடர்பான காணொளிகளையும் கொலை எண்ணிக்கைகளையும் பகிர்ந்துகொண்டார் என்று வழக்கறிஞர் மேலும் கூறினார்.

ஏப்ரல் 2022ல் அவர் நாய்களை துன்புறுத்தும் காணொளிகள் விலங்குகள் நலக் குழுவிற்கும் உள்ளூர் காவல்துறைக்கும் அனுப்பப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் தொடர்பான பாலியல் காணொளிகளும் அவரிடம் இருந்தன. பிரிட்டன் குறைந்தது 39 நாய்களைக் கொன்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here