கோலாலம்பூர்:
சட்ட விதிமுறைகளுக்கு இணங்காத சமூக வலைத் தளங்களுக்கு 2025 ஜனவரி முதல் மலேசியாவில் தடை விதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998ன் கீழ் வகுக்கப்பட்டு உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிம விதிமுறைக்கு உட்படவில்லை என்று கண்டறியப்படும் சமூக ஊடகத் தளங்களும் இணையத் தகவல் சேவைகளும் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்றும், சமூக ஊடகத் தளங்களையும் இணையத் தகவல் சேவைகளையும் மூடும் நடவடிக்கைகள் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையில் நடவடிக்க்கை எடுக்கப்படும் என்று, சுங்கை சுமுனில் நடந்த அம்னோ கட்சிப்பிரிவு கூட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சமூக ஊடகங்களையும் இணையத் தகவல் சேவைகளையும் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறை கட்டமைப்பு ஆகஸ்ட் 1 முதல் நடப்புக்கு வர இருக்கும் வேளையில் அது தொடர்பாக துணைப்பிரதமரிடம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.




















