30 நிமிடத்தில் மொத்தமும் காலி.. பாகிஸ்தானில் மால் திறந்தவருக்கு நேர்ந்த கதி.. இப்படியா திருடுவாங்க?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் புதிதாக மால் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த 30 நிமிடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனைத்து பொருட்களையும் திருடிச்சென்றனர். இதனால் புதிதாக திறக்கப்பட்ட மால் வெறும் 30 நிமிடங்களில் மொத்தமாக காலியானது.

பாகிஸ்தானில் உள்ள முக்கியமான நகரங்களில் கராச்சியும் ஒன்று. இங்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்பவர்களும் கராச்சிக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் கராச்சியில் உள்ள கூலிஸ்டன் இ-ஜோஹர் பகுதியில் புதிதாக மால் திறக்க முடிவு செய்யப்பட்டது. ‛ட்ரீம் பஜார்’ என பெயரிடப்பட்ட அந்த மாலை வெளிநாட்டில் வசித்து வருபவர் கராச்சியில் அமைத்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த மாலின் திறப்பு விழா என்பது நேற்று முன்தினம் நடந்தது. திறப்பு விழா சலுகை மற்றும் மாலை பிரபலப்படுத்தும் வகையில் மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு செய்யப்பட்டன. அதன்படி இந்திய மதிப்பில் 15 ரூபாய், 50 ரூபாய் உள்பட பொருட்களின் விலை என்பது மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மால் திறப்பு விழாவையொட்டி ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.

எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே பிற்பகல் 3 மணிக்கு புதிய மால் திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மின்னல் வேகத்தில் மாலுக்குள் நுழைந்தனர். வாயில் சிறியதாக இருந்தால் பலரும் கண்ணாடியை உடைத்து கொண்டு மாலுக்குள் நுழைந்தனர்.

இது மால் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் மாலின் அனைத்து இடங்களுக்கும் சென்று தங்களுக்கு விருப்பமான ஆடை, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களையும் மொத்தம் மொத்தமாக அள்ளினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் அவர்கள் அதற்கு பணம் செலுத்தாமல் மாலில் இருந்து வெளியேறினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் கூட பிற்பகல் 3.30 மணிக்குள் மாலில் இருந்து 80 சதவீத பொருட்கள் மாயமாகி இருந்தது. மாலுக்குள் இருந்த ஆடைகள் ஆங்காங்கே சிதறிப்போய் கிடந்தன. இதுபற்றி மால் ஊழியர்கள், கராச்சி மக்களின் நலனுக்காக நாங்கள் மால் திறந்தோம். ஆனால் திறப்பு விழாவில் மக்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர். கராச்சியை பொறுத்தவரை பெரிய அளவில் எந்த முதலீடுகளும் செய்யப்படுவது இல்லை. உண்மையில் அதன் பின்னணியை நாங்கள் இப்போது உணர்ந்துவிட்டோம். கராச்சியில் முதலீடு செய்தால் இதுதான் நிலைமை என்பதை எங்களுக்கு மக்கள் உணர்த்திவிட்டனர்  என வருத்தமாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here