ரவாங்:
குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் ரவாங் குண்டாங்கில், கம்போங் பாரு குண்டாங் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இன்று பின்னிரவு 2 மணியளவில் அந்நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையால் தேடப்பட்டவரான அந்நபருடன் மேலும் சிலரும் நிசான் கிராண்ட் லிவினியா ரக வாகனத்தில் பயணம் செய்தனர். அந்த வாகனத்தை நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் குழு ஒன்று விடுத்த எச்சரிக்கையை மீறி அந்தக் கார் வேகமெடுத்தது.
மேலும் அதிலிருந்தவர்கள் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதில் நடவடிக்கையாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட ஆடவர் கொல்லப்பட்டதோடு சில சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இது குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.




















