துபாய்: சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
முகமது அல் காம்தி,50, என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். இவர், வெறும் 9 பாலோயர்களைக் கொண்ட தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அரசுக்கு எதிராகவும், தீவிரவாத கொள்கைகளுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வந்தார். இதனடிப்படையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன்மாதம் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு, சரியாக ஒரு வருடத்தில் காம்திக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஆகஸ்ட் மாதம், தூக்கு தண்டனையை ரத்து செய்ததது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில் அவரது சகோதர் ஆஸாத் அல் காம்திக்கு,47, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



















