மலேசியா – ஆஸ்திரேலியா இடையிலான 6ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மலேசியா வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் நேற்றுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அன்வாரும் வோங்கும் இருவழி உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினர். அவற்றுள் பொருளாதாரம், தற்காப்பு, பாதுகாப்பு, இணையம், கல்வி ஆகியவை அடங்கும் எனத் தெரிய வந்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மலேசியா ஆஸ்திரேலியா இடையிலான 70ஆவது அரச தந்திர ஆண்டைக் கொண்டாடுவது குறித்தும் அவ்விருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அடுத்தாண்டு மலேசியா ஏற்கவிருக்கும் ஆசியான் தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலியா முழு ஆதரவு கொடுக்கும் என அச்சந்திப்பின்போது பென்னி வோங் கூறினார்.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிசேவுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடருக்கு ஆஸ்திரேலியா தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பென்னி வோங் கூறினார்.
இச்சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானும் உடனிருந்தார். கடந்த 1957ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மலேசியாவுடன் அரச தந்தி உறவைக் கொண்டுள்ளதாக விஸ்மா புத்ரா நேற்றுக் கூறியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, மலேசியாவில் பெரிய அளவில் வர்த்தகம் புரியும் ஒரு நாடாக விளங்கி வந்தது.





















