மக்களின் ஒற்றுமையைப் புலப்படுத்துவதற்கு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன, சமய பேதமின்றி அனைத்து இனத்தவரும் பல்வேறு உதவிகளை நல்கி வருவதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வலியுறுத்தினார்.
இது இந்நாட்டு மக்களிடையே நிலவி வரும் ஒரு நற்பண்பாகும். காரணம் மலேசியாவைப் போன்று இதர நாடுகளில் இதுபோன்ற உதவி செய்யும் மனப்பான்மையை அங்குள்ள மக்கள் கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார். காரணம் நேற்றுத் தாம் தற்காலிக துயர்துடைப்பு மையங்களுக்குச் சென்றபோது அங்குள்ள அரசாங்க அதிகாரிகள், தொண்டூழிய முறையில் சேவையாற்றி வந்ததைக் கண்கூடாகப் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

ராணுவம், தீயணைப்பு – மீட்புப்படை, பொது தற்காப்புப்படை ஆகியோர் சுமார் 80 ஆயிரம் பேர் இதில் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது குறித்து தாம் மனம் நெகிழ்வதாகப் பிரதமர் கூறினார். இதனைத் தவிர்த்து அரசாங்கத் துணை நிறுவனங்களும் வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கிளாந்தானில் சீன வர்த்தகர் ஒருவர் 10 லோரிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்ததைத் தாம் முன்மாதிரியாகக் காட்டுவதாக நிதி அமைச்சருமான அவர் கூறினார்.

இது மலேசியர்களிடையே இருந்து வரும் சிறந்த நற்பண்பாகும். அனைவரும் இன, சமய பேதமின்றி களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாகத் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பெருமிதம் கொண்டார்.
இதுபோன்ற நல்ல விஷயங்களை நாம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன, சமய பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றும் பண்புகளையும் நற்செயல்களையும் இது எடுத்துக்காட்டுவதாகப் பிரதமர் சொன்னார். மலேசியாவில் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும். மாறாக இதர நாடுகளில் இதுபோன்ற நிலை இல்லை என அவர் கூறினார்.

நேற்று ஸ்ரீபெர்டானாவில் மடானி ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபுபாக்கார், நட்மா எனப்படும் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பின் இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





















