மும்பை திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படம் திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை பாந்த்ராவில் உள்ள திரையிரங்கில் ‘புஷ்பா 2’ படம் ஓடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஸ்பிரே ஒன்றை அடித்தார். இதனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது.இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரித்தனர். ஆனால் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.
முன்னதாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி ஐதாராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. அப்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு காட்சிக்கு வந்த அல்லு அர்ஜுனைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 35 வயதான பெண் உயிரிழந்த நிலையில், அவரது ஒன்பது வயது மகன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















