சென்னை,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறனிடம் மூன்றாம் பாகம் உருவாகுமா என கேட்கப்பட்டது. இன்னொரு தீவிரமான பயணத்திற்கு இப்போது நான் தயாராக இல்லை. ஏற்கனவே விடுதலை படத்திற்காக நிறைய காட்சிகளை படமாக்கி விட்டோம். முதல், இரண்டாம் பாகம் மற்றும் திரைப்பட விழா வெர்ஷன் என ஏகப்பட்ட படப்பிடிப்பை நடத்தி விட்டோம். தற்போது மட்டும் மொத்தமாக எட்டு மணிநேர படமாக விடுதலை உள்ளது.
‘விடுதலை 2’ ரிலீசுக்கு முந்தைய நாள் வரை பல அதிரடி மாற்றங்களை வெற்றிமாறன் செய்துள்ளதாக பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விடுதலை 3 இல்லையென அவர் தெரிவித்துள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசலை இயக்கவுள்ளார்.



















