கோலாலம்பூர்:
தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தன் பிள்ளைகளுக்கு காலஞ்சென்ற முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்தார் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் நேற்று வியாழக்கிழமையன்று (டிசம்பர் 26) தமது 92ஆவது வயதில் காலமானார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், தம்மிடம் காட்டிய கனிவன்பைச் சுட்டிக் காட்டிய அவர், மன்மோகன் சிங்கை ‘உண்மையான நண்பர்’ எனக் குறிப்பிட்டார்.
அப்போது, அவரது உதவியைத் தான் ஏற்க மறுத்தபோதும், மன்மோகன் சிங்கின் அச்செயல் அவரது ‘வியத்தகு மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும்’ வெளிப்படுத்துவதாக அமைந்தது என்று அன்வார் கூறினார்.
“அத்தகைய பெருந்தன்மைமிக்க செயல்களே அவரது நற்பண்புக்கு சான்று என்றும், அவை என்றென்றும் என் நெஞ்சில் பதிந்திருக்கும், மிகவும் மரியாதைக்குரிய, அன்புக்குரிய நண்பரான மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்” என்றும் பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.