இஸ்தானா நெகாரா அறிவுறுத்தலை ஏற்று ஜனவரி 6 ஆம் தேதி புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் நடத்த திட்டமிட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் ஆதரவு பேரணியை அம்னோ ரத்து செய்தது.
இவ்விவகாரத்தில் ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் ஆலோசனைக்கும் அம்னோ செவிசாய்த்திருக்கிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கூறினார்.
நஜிப் வழக்கில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் விதி 42 (1), (2) கீழ் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு உள்ள அதிகாரத்தை அம்னோ மதிக்கிறது என்று அவர் சொன்னார்.
அம்னோ எப்போதுமே மாமன்னருக்கு உச்சபட்ச மரியாதை வழங்குவதில் முன்னுரிமை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப் ஆதரவு பேரணியை நடத்துவதற்கு முன் அரசியலமைப்புச் சட்டத்தையும் நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் மதிக்க வேண்டும் என்று அரண்மனை ஓர் அறிக்கை வழி பொது மக்களுக்கு அறிவுறுத்தியது.


















