அம்பாங்கில் ஏழு வயது சிறுவன் மரணம் ; தாயும் காதலனும் கைது

கோலாலம்பூர்:

தாமான் புக்கிட் அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 2.36 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுவாசிக்கவில்லை என்று அந்தப் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, சிறுவனின் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

“கோலாலம்பூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த சிறுவனின் தலையில் ஏற்பட்டிருந்த இரத்தப்போக்குதான் மரணத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது, மேலும் முதற்கட்ட விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர் வீட்டில் ஒரு மழுங்கிய பொருளால் பலமுறை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் ” அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே விசாரணைக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட சிறுவனின் 25 வயது தாயும் அவரது 36 வயது காதலனும் அதே நாள் மாலை 5.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக முகமட் அசாம் தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், விற்பனையாளராக பணிபுரியும் ஆண் சந்தேக நபர் ஆம்பெடமைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன. அதேநேரம் பாதிக்கப்பட்டவரின் தாயார் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லை.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் ஜனவரி 17 வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here