கோத்தா திங்கி:
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து, நேற்று ஜோகூரின் ஐந்து மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதில் கோத்தா திங்கி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

வெள்ளம் காரணமாக சுமார் 3,449 பேர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அம்மாவட்டங்களிலுள்ள தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் கோத்தா திங்கியில் 13 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, செயற்பாட்டிலுள்ளன. அதேநேரம் பொந்தியானில் 8, குளுவாங்கில் 5, ஜோகூர் பாருவில் 5 மற்றும் கூலாயில் 4 என மொத்தம் 36 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளன.
இந்நிலையில் கனமழை தொடரும் என்றும், பத்து பகாட் மற்றும் மெர்சிங் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















