ஷா ஆலம்:
பெரானாங்கில் உள்ள காபூல் ஆற்றுநீர் நேற்று இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டறிந்த சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS) அங்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நீர் 500 மீட்டர் நீளம் வரை காணப்பட்டது என்றும், 16.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (LRA) பாதிக்கலாம் என்றும் அது கவலை வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 6.40 மணியளவில் கண்டறியப்பட்ட இளஞ்சிவப்பு ஆற்றுநீருக்கான காரணம், பெரானாங் தொழில்துறை பகுதியில் உள்ள தொழிற்சாலையின் கழிவு எனக் கண்டறியப்பட்டது என்றும், அதனைத் தொடர்ந்து, குறித்த தொழிற்சாலை அதன் வெளியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும் மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று LUAS நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவத்தால் இதுவரை நீர் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதை ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.




















