மாலே: இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ரூபே கார்டுகளை மாலத்தீவு ஏற்றுக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா மாலத்தீவு இடையே கடந்த சில காலமாக மோசமான உறவு நீட்டித்து வந்தது அனைவருக்கும் தெரியும். மாலத்தீவு அதிபர் முய்சுவின் போக்கே இதற்குக் காரணமாக இருந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக மாலத்தீவை இந்தியச் சுற்றுலாப் பயணிகள் புறக்கணித்ததால் அந்நாட்டு அரசுக்கு அது மிகப் பெரிய இழப்பாக மாறியது. இதையடுத்து மாலத்தீவு தனது டோனை மாற்றி இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகள்: ஏற்கனவே, இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவின் ரூபே சேவையை தங்கள் நாட்டிலும் தொடங்க மாலத்தீவு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், எப்போது ரூபே சேவை மாலத்தீவில் தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மாலத்தீவு அமைச்சர் கூறுகையில்,”ரூபாய் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிகளை ஆராய நாங்கள் இப்போது இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
ரூபே: உலகில் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கியின் கீழே இயங்கும் என்பிசிஐ என்ற அமைப்பு கொண்டு வந்தது தான் இந்த ரூபே கார்டுகள். இப்போது இந்தியாவில் பெரும்பாலான ஏடிஎம்கள், பிஓஎஸ் சாதனங்கள், ஆன்லைன் தளங்களில் ரூபே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அடுத்தகட்டமாக உலகளவில் ரூபே கார்டுகளை எடுத்துச் செல்லவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் தான் மாலத்தீவும் ரூபே கார்டுகளை ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது மாலத்தீவு கரன்சியான ருஃபியாவை மேம்படுத்தும் என்று மாலத்தீவு அமைச்சர் ஒருவர் கூறினார். டாலர் பயன்பாடு சிக்கலாகி வரும் நிலையில், ருஃபியாவை பயன்பாட்டை வலுப்படுத்த வேண்டியதே தற்போதைய நிர்வாகத்தின் முதன்மையான பணி என்று அந்நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை: கடந்த 2022 முதலே இந்தியா மாலத்தீவு இடையே இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அப்போது இது குறித்து மாலத்தீவின் அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், “மாலத்தீவில் ரூபே கார்டுகளை பயன்படுத்த ரெடியாக இருக்கிறோம். இது இருதரப்பு சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும்” என்று கூறியிருந்தார்.
பொதுவாகச் சர்வதேச நாடுகளுக்கு இடைய நடக்கும் பணப் பரிமாற்றங்கள் பெரும்பாலும் டாலரில் தான் இருக்கும்.. டாலரை பயன்படுத்தும் போது அதற்குக் குறிப்பிட்ட தொகையை அமெரிக்காவுக்குச் செலுத்த வேண்டும். இது அனைத்து நாடுகளுக்கும் ஒரு செலவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே டாலர் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் மாலத்தீவு ரூபே கார்டுகளை ஏற்றுக் கொண்டுள்ளதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டாலர்: மேலும், இந்தியாவும் சீனாவும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக அந்தந்த நாடுகளின் கரன்சியிலேயே இறக்குமதிக்குப் பணம் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு மாலத்தீவு இந்திய ரூபாயிலேயே பணத்தைச் செலுத்தும். இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தான் மாலத்தீவு பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் நிலையில், இந்த நடவடிக்கை மாலத்தீவுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.





















