குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்; பெண் பிள்ளைகளின் திருமண வயது 9 ஆக குறைப்பு!

பாக்தாத்:

ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்தது. ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இருப்பினும் இந்த சட்டம் மூலம் இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 18 வயதில் இருந்த திருமண வயது எல்லை, 9 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.

நீதியை மேம்படுத்துவதற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கை தான் இந்த சட்டம் என ஈராக் பார்லிமென்ட் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குழந்தை திருமண சட்டத்திற்கு ஈராக் ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here