இந்தியத் தொழில்முனைவோருக்குப் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்த ரமணன்;RM471 மில்லியனுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர்:

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சராக டத்தோஸ்ரீ ஆர். ரமணன் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், இந்திய சமூகத் தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் RM471.5 மில்லியனுக்கும் அதிகமான சாதனை அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளார். இது இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.

பல்வேறு உயர்மட்டத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோரை உருவாக்கி, அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் வலுவூட்டியுள்ள இந்தச் சாதனை, வரலாற்றில் இல்லாதது என்று அவர் விவரித்தார்.

தமது முதன்மை நோக்கம், இந்தியர்களுக்கு பொருளாதார ரீதியில் உறுதியான அடித்தளத்தை அமைப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதுதான் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு (குஸ்கோப்) துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

“அமைச்சகத்தில் நியமனம் பெற்ற எனது முதல் நாளிலிருந்தே, இந்திய சமூகத் தொழில்முனைவோரின் வெற்றிகளை முன்னிலைப்படுத்த நான் முயன்றேன். இந்திய சமூகத்திற்குப் பொருளாதார வலுவூட்டுவதே இந்த இலக்கை அடைவதற்கான அடித்தளம்,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்திய சமூகத் தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும், இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் “கடுமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளாகும்” என்றும் கூறினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், சிறு தொழில்முனைவோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நீண்ட காலமாக விரிவான ஆதரவு தேவைப்பட்ட இந்தியச் சமூகத்தின் பிரிவுகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறினார்.

முக்கிய மூலோபாயத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்:

தெக்குன் நேஷனல் (Tekun Nasional) கீழ் SPUMI மற்றும் SPUMI Goes Big: RM100 மில்லியன் நிதி. (இது 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கிடைத்த அதிகபட்ச ஒதுக்கீடு.) இத்திட்டம் நிதி அணுகல், பயிற்சி மற்றும் வணிக வழிகாட்டலை வழங்குகிறது.

இந்தியப் பெண் தொழில்முனைவோர் அதிகாரமளிப்புத் திட்டம் (PENN): RM100 மில்லியன் நிதி.

வங்கி ரக்யாத் இந்தியத் தொழில்முனைவோர் நிதி-i (BRIEF-i): RM100 மில்லியன் நிதி.
என்பன குறிப்பிடத்தக்கவை.

மேலும் இந்திய சமூகத்திற்கான தொழில்முனைவோர் சூழல் அமைப்பு (Ecosystem) பின்வரும் திட்டங்கள் மூலம் அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது:

SME வங்கி கீழ் ‘வாணிகம்’ மற்றும் ‘வாணிகம் பிளஸ்’: RM50 மில்லியன்

I-BAP SME கார்ப் பொருத்தமான மானியம் (Matching Grant): RM6 மில்லியன்

பெர்னாஸ் (Pernas) கீழ் ‘சூரியன்’: RM54.5 மில்லியன்

மலேசியக் கூட்டுறவுக் கழகங்கள் ஆணையம் (MACC) கீழ் ‘மடானி பக்தி மேம்பாட்டு மானியம்’: RM1 மில்லியன்

மேலும், ‘வணக்கம் மடானி’ மற்றும் ‘இந்தியத் தொழில்முனைவோர் அதிகாரமளிப்புத் திட்டம் (EIP)’ போன்ற திட்டங்களும் இந்தச் சாதனைகளுக்குப் பக்கபலமாக இருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில் மலேசியக் கூட்டமைப்பு இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், ரமணன் தலைமையிலான நிர்வாகம் தொழில்முனைவோருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகப் பாராட்டினார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட முயற்சிகள் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சீர்திருத்தங்கள், ‘வாணிகம்’ SME வங்கி நிதித் திட்டத்தின் மூலம் தனது வணிகத்தை விரிவுபடுத்திய சன்வா டூர்ஸ் (M) Sdn Bhd நிறுவனத்தின் ஆப்ரேட்டர் சதீஷ் சுப்பிரமணியம் போன்றவர்களால் உண்மையிலேயே பயனளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here