மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவின் பச்சோரா எனுமிடத்துக்கு அருகே புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயணம் செய்த ரயிலில் தீ மூண்டதாகக் கிளம்பிய வதந்திக்கு அஞ்சி ரயிலை நிறுத்திக் கீழே குதித்தனர் என்றும் அந்தப் பாதையில் சென்ற மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியதில் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பச்சோராவுக்கு அருகே சென்றபோது தீ குறித்த வதந்தியால் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்துச் சிலர் கீழே இறங்கினர்.
அப்போது அந்தத் தடத்தில், பெங்களூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கர்நாடகா விரைவு ரயில் அவர்களை மோதியதாக இந்தியாவின் மத்திய ரயில்வே துறைப் பேச்சாளர் கூறினார்.
புஷ்பக் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ‘பிரேக்’ கருவியில் ஏற்பட்ட கோளாற்றால் அவ்வாறு தீப்பொறி உண்டாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீப்பொறியைக் கண்டு பீதியடைந்த பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதாகத் தெரிகிறது.
உயிரிழந்த 13 பேரில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.









