இங்கிலாந்தில் சிறுவர் பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட 170 வெடிகுண்டுகள்

லண்டன்:இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் பூங்காவில் பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசில் தகவல் அளித்தனர். அதன்பேரில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அந்த வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதனால் பூங்காவின் மற்ற இடங்களையும் தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த ஒரு மாதமாக அங்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ ஆகும்.

இதனையடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர் பூங்காவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here