கோலாலம்பூர்,
குவாந்தம் மெட்டல் சென்டிரியான் பெர்ஹாட் தன்னுடைய ஆகக்கடைசியான நிதி நிலைத்தன்மையை அறிவித்ததோடு அதன் பங்குதாரர்களுக்கான நீண்டகாலக் கடப்பாட்டையும் உறுதி செய்தது.
பொறுப்புமிக்க கார்ப்பரெட் நிறுவனம் என்ற முறையில் வலுவான நிதி, வெளிப்படைத்தன்மை, பண்புகளை நிலைநிறுத்துவது, வேலை வாய்ப்புகளுக்குப் பங்களிப்புகளை வழங்குவது, பொருளாதார வளர்ச்சிக்கான ஆதரவு ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்படும் எனவும் உறுதி அளித்தது.
நிறுவனத்தின் மீது துறைசார்ந்த அமலாக்கப் பிரிவுகள் புலன் விசாரணையை நடத்தின. ஆனால் முறைகேடுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்து அடுத்தகட்ட நடவடிக்கை இல்லை என்ற முடிவுக்கு வந்தது நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மைக்குக் கிடைத்திருக்கும் ஓர் உயரிய சான்றாகும் என்று நிறுவனத்தின் கார்ப்பரெட் ஆலோசகர் டத்தோ டேனியல் சின் தெரிவித்தார்.
சட்டப்பூர்வமாக உயர்நெறியுடன் இந்நிறுவனம் அதன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் புலன் விசாரணை முடிவு வலு தந்திருக்கிறது. வர்த்தகத்திற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு குவாந்தம் மெட்டல் செயல்பட்டிருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகி இருக்கிறது என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். 2023ஆம் ஆண்டு முழுவதும் குவாந்தம் மெட்டல் 2.9 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தந்திருக்கிறது. இன்னும் 3 விழுக்காட்டினருக்கு மட்டுமே திருப்பித் தரப்படாமல் இருக்கிறது. தங்க விலையில் ஏற்பட்ட திடீர் விலை உயர்வே இதற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



















