சமய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டே தாம் பொது விவாதத்தைக் கைவிட்டதாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
‘சுயேச்சை சமய போதகர் ஸம்ரி வினோத்துடன் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் தனிப்பட்ட வகையிலான விவாதத்தை நடத்துமாறு தம்மை ஒரு சிலர் வலியுறுத்துகின்ற போதிலும் சமய நல்லிணக்கத்தையும் தேவையற்ற சமாச்சாரங்களையும் தவிர்க்கும் வண்ணம் அந்த ஆலோசனைகளைப் புறம் தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.
நேருக்கு நேர் விவாதத்தில் களமிறங்க துணிவின்றி தாம் பின்வாங்கி விட்டதாக கூறப்படுவது குறித்தெல்லாம் தாம் கலவையடையப் போவதில்லை‘ என்று குறிப்பிட்ட அவர் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் வகையிலும் அரச மலேசிய காவல் படையின் ஆலோசனையின் அடிப்படையிலும் அந்த நோக்கத்தைக் கைவிட்டதாக சரவணன் கூறினார்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில், உணர்ச்சிகரமான விவாதங்களைத் தவிர்ப்பதற்கான மிகப் பெரிய பொறுப்பைத் தாம் ‘சுமந்திருப்பதையும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
தாப்பா அம்னோ மண்டபத்தில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மசுதிகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் நிதியுதவி வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.




















