Sumbangan Asas Rahmah (SARA) உதவிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் MyKad அட்டை வாயிலாக வழங்கப்படும். இந்த உதவிக்கு 13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5.4 மில்லியன் மக்கள் இவ்வாண்டு இந்த ரொக்க உதவிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தற்போதைய SARA பெறுநர்களின் எண்ணிக்கை 700,000 பேராக உள்ளது. இந்த 5.4 மில்லியன் SARA உதவிப் பெறுநர்களில் 4.7 மில்லியன் பேர் STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவியை பெறுபவர்களாக உள்ளனர். இந்த உதவி ரொக்கமில்லா நிதியுதவி என்பதால், ஏப்ரல் 1 முதல் பெறுநர்களின் MyKad அட்டைகளில் தொகை சேர்க்கப்படும்.
முன்பு மாதந்தோறும் 100 ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், ஏப்ரல் முதல் இது 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, SARA பெறுநர்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையை குறைக்க உதவும் என நிதியமைச்சின் கருவூல துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ ஸம்ஸாரி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.









