கல்வி, உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் அண்டை நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி நேற்று இந்தோனேசியா சென்றடைந்தார்.
துணைப் பிரதமரும் அவரது குழுவினரும் உள்ளூர் நேரப்படி மாலை 7.01 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 8.01 மணி) சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஅமாட் ஜாஹிட்டை, இந்தோனேசியாவின் மத விவகார அமைச்சர் நசாருதீன் உமர், இந்தோனேசியாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சையத் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் மற்றும் ஆசியானுக்கான மலேசியாவின் நிரந்தர பிரதிநிதி டத்தின் சாரா அல் பக்ரி தேவதாசன் ஆகியோர் வரவேற்றனர்.
“இந்த விஜயம் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று சையத் முகமட் ஹஸ்ரின் மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.























