ஜெர்மன் பிரதமர் பதவியேற்பு தாமதம்

பெர்லின்:

ஜெர்மனியின் கன்சர்வேட்டிவ் (பழமைவாத) தலைவர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ், செவ்வாய்க்கிழமை (மே 6) நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை பெறத் தவறிவிட்டார்.

பிரதமராக 630 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால், ஜெர்மனி கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சித் தலைவர் 310 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

மத்திய – இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியினர் உடனான அவரது கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்கள் உள்ளன. ஆனால் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வாங்கிவிட்டனர். முதல் வாக்கெடுப்பில் மெர்ஸின் தோல்வி நவீன ஜெர்மன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது.

மெர்ஸை அல்லது வேறொருவரை பிரதமராகத் தேர்வு செய்ய இன்னும் 14 நாள்கள் உள்ளன.

ஜெர்மனி அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பு நடத்த கட்டுப்பாடு இல்லை. ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஒரு குறுகிய பெரும்பான்மை பெற்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம்.

செவ்வாய்க்கிழமையே இரண்டாவது நடைபெறும் என்று கூறப்பட்டது.

முதல் சுற்றில் மெர்சின் தோல்வி அவமானகரமானதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இது சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரு சில அதிருப்தி உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அக்கட்சி திங்களன்று அவரது பழைமைவாதிகள் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

630 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் வரவில்லை என்றும், மூவர் வாக்களிக்கவில்லை என்றும் மற்றொரு வாக்குச் சீட்டு செல்லாது என்றும் நாடாளுமன்றத் தலைவர் கூறினார்.

போருக்குப் பிந்தைய வீழ்ச்சியிலிருந்து நீண்ட காலமாகப் போராடும் பொருளியல், உயர்மட்ட பாதுகாப்புக்கான நட்பு நாடான அமெரிக்காவுடன் உறவுப் பாதிப்பு, தீவிர வலதுசாரி எழுச்சி என்று சவால்கள் நிறைந்த ஜெர்மனியின் முக்கியமான காலகட்டத்தில் நாடு தகுந்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் அவரது எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, ஆட்சி அமைக்க மத்திய-இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியினர் கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஓலாஃப் ஷோல்சின் தலைமையிலான மூன்று வழி கூட்டணி உடைந்ததையடுத்து கடந்த நவம்பர் மாதம் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அது அங்கு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்திய நிலையில், தலைமைத்துவத்தை வெளிப்படுத்த மெர்சுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளால் ஏற்பட்ட உலகளாவிய வர்த்தகப் போர், ஏற்கெனவே தொடர் வீழ்ச்சி கண்டுவரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளியலான ஜெர்மனிக்கு மேலும் அச்சுறுத்தலாகி உள்ளது.

2022ல் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பினால் மலிவான ரஷ்ய எரிவாயு இறக்குமதியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. சீனாவினால் ஏற்பட்டுள்ள போட்டி அதன் பொருளியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் கூட்டணி ஒப்பந்தம், பெருநிறுவன வரியைக் குறைத்தல், எரிசக்தி விலைகளைக் குறைத்தல் போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. உக்ரேனுக்கு வலுவான ஆதரவைத் தெரிவிப்பதுடன் அதிக ராணுவ செலவினங்களையும் மேற்கொள்ள ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு 1989ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட, பழம்பெரும் அரசியல்வாதி என்றாலும், மெர்ஸ் ஒருபோதும் அரசாங்க பதவியை வகித்ததில்லை என்பதால் நிர்வாகத்தில் அவர் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும்.

2002ல் ஏஞ்சலா மெர்க்கலிடம் கட்சி அதிகாரப் போராட்டத்தில் தோற்ற பின்னர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் துறையில் பணியாற்றினார் மெர்ஸ். வசதிபடைத்த, கத்தோலிக்க மேற்கு ஜெர்மன் வழக்கறிஞரான அவர், பொழுதுபோக்கு விமானியும் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here