ஷா ஆலம்,
ஆசியான் நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத் (ஏஐபிஏ) தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார். தற்போது உலகத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருப்பதால் எதிர்பார்க்காத அளவு இதுபோன்ற நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்க ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு வலுப்பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசியான் பிரதேசத்தில் 700 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களுள் 40 விழுக்காட்டினர் இளம் தலைமுறையினர் ஆவர். ஆகவே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் 3 செலுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒருவர் மற்றவரைப் புரிந்துகொண்டு ஒரே அணியாக ஆசியான் முன்னோக்கி நகர வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகருமான ஜொஹாரி கேட்டுக்கொண்டார்.
ஒத்துழைப்பு இல்லாவிடில் மத்திய கிழக்கு, அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்கா, இந்தியா -பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நாமும் சந்திக்கக்கூடும் என நாங்கள் கவலைப்படுகிறோம் என்று அவர் சொன்னார். ஆகவே கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நீடிக்கும் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத் தலைமுறையினர் நல்வாழ்வுக்காக சகோதரத்துவ ஒத்துழைப்பை மேலும் அணுக்கமாக்கிக் கொள்ள வேண்டும். என்று அவர் பரிந்துரைத்தார். இந்தப் பேரவையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு புதன்கிழமை இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவும் இதில் கலந்துகொண்டார்.









