சென்னை,:
தமிழக அரசு துறை அலுவலகங்கள் அமைக்க, டில்லியில் 1.41 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கப்பட உள்ளது.
டில்லி சாணக்யாபுரியில், 1.75 ஏக்கர், திக்கேந்திரஜித் மார்க்கில், 1.96 ஏக்கரில், தமிழ்நாடு விருந்தினர் இல்லங்கள் உள்ளன. இங்கு, தமிழக அரசின் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
இங்குள்ள வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக பிகாஜி காமாவில் உள்ள எம்.டி.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான வர்த்தக கட்டடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
இதற்காக, வாடகை, தண்ணீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட செலவுகளுடன், 2,400 சதுர அடி அறை, இரண்டு ஆண்டுகளுக்கு, 1.44 கோடி ரூபாய்க்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அங்கு இடநெருக்கடி உள்ளது. வரும் காலங்களில் இட தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இல்லம் உட்பட, டில்லியில் உள்ள தமிழக அரசின் பல துறைகளின் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும், அலுவலகங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.





















