தங்கத்தில் தாலி வாங்க விரும்பிய 93 வயது முதியவர்: இலவசமாக அளித்த நகைக்கடை உரிமையாளர்

மும்பை:

ன் மனைவி மீதான அன்புமிகுதியால் தங்கச் சங்கிலி வாங்கி பரிசளிக்க விரும்பிய 93 வயது முதியவரின் அன்பைக் கண்டு நகைக் கடை உரிமையாளர் அந்தச் சங்கிலியை இலவசமாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. அவரது மனைவி சாந்தாபாய். அண்மையில் ஏகாதசி தினத்தை முன்னிட்டு இருவரும் பந்தர்பூர் ஆன்மிகத் தலத்துக்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

அங்கு சென்றதும், மனைவிக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பியுள்ளார் முதியவர் நிவ்ருத்தி. அருகில் உள்ள நகைக்கடைக்கும் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளை குர்தாவும் தொப்பியும் அணிந்து ஏழ்மையாகக் காணப்பட்ட அவரை, நகைக்கடை ஊழியர்கள் யாசகம் கேட்டு வந்திருப்பதாக தவறாகக் கருதிவிட்டனர்.

பிறகு, தங்கச் சங்கிலி வாங்க வந்திருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர்.

நகைக் கடையில் பல சங்கிலிகளைப் பார்த்த பின்னர், தன்னிடம் இருந்த வெறும் 1,120 ரூபாயைக் கொடுத்து சங்கிலி வேண்டும் என்றார் முதியவர். விவரம் அறியாமல் முதியவர் அவ்வாறு கேட்டது நகைக் கடை உரிமையாளருக்கு மேலும் வியப்பளித்தது.

“இன்றைய தேதியில் தங்கத்தின் விலை தெரியாமல் அந்த முதியவர் பேசினார். மனைவி மீதான அவரது அன்பும் காதலும் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. ஆசிர்வாதத்தின் அடையாளமாக அவரிடம் இருந்து ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர் விரும்பிய தாலிச் சங்கிலியை இலவசமாகக் கொடுத்துவிட்டேன்,” என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.

முதியவர் நிவ்ருத்தி தம்பதியர்க்கு ஒரு மகன் உள்ளார், இருந்தாலும் இருவரும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதாக அவரது கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்தத் தம்பதியர் நகைக் கடையில் இருக்கும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here