இன்று முதல் அமலான VEP நடைமுறை; ஒரு மணி நேரத்திற்குள் 10 பேருக்கு அபராதம்

ஜோகூர் பாரு:

மலேசியாவில் VEP என்கின்ற வாகன நுழைவு அனுமதி (VEP) முறை ஜூலை 1 நள்ளிரவு முதல் முழுமையாக அமலாக்கப்பட்ட நிலையில், முதல் ஒரு மணி நேரத்திற்குள் பத்து சிங்கப்பூர் வாகன ஓட்டிகளுக்கு தலா RM300 அபராதம் விதிக்கப்பட்டது.

55 சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில், செல்லுபடியாகும் மற்றும் செயல்படுத்தப்பட்ட VEPகள் இல்லாத வெளிநாட்டுப் பதிவு செய்யப்பட்ட தனியார் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்று சாலைப் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் அடி ஃபட்லி ரம்லி கூறினார்.

ஜூன் 29-ஆம் தேதி வரை 2,48,000க்கும் அதிகமான சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகன ஓட்டுநர்கள் VEP-க்கு பதிவு செய்துள்ளனர் என்றும், ஆனால், அதில் 17 விழுக்கான வாகன ஓட்டிகள் இன்னும் தங்கள் அனுமதிகளை செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை செயற்படுத்துவதற்கு வாகன ஓட்டுநர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், எல்லைச் சோதனைச் சாவடிகள் போன்ற கோஸ்வே மற்றும் செக்கண்ட் லிங்க் ஆகிய இடங்களைத் தவிர்த்து, அமலாக்க நடவடிக்கைகள் அனைத்தும் வேறு இடங்களில் நடைபெறுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here