கோலாலம்பூர்:
ரெம்பாவிலுள்ள ஒரு பள்ளியில் அறிவாற்றல் குறைபாடுடைய 16 வயது மாணவி ஒருவர், தன்னை ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் மே 5ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. குறித்த மாணவி ஜூலை 5ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார் என்று, ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டு ஹசானி ஹுசைன் கூறினார்.
“சிறப்பு தேவையுஐயவர்களுக்கான கல்வி திட்டமான ‘PPKI’-யில் பயிலும் இந்த மாணவி, குற்றச்சாட்டின் படி, குறித்த நாள் காலை 10.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாணவி ஒரு தூர ஓட்டத்திற்கு பிறகு கால்களில் வலி ஏற்பட்டதாக கூறிய நிலையில், அந்த ஆசிரியர் அவரது கால்களை மசாஜ் செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் அவரது கால்களின் பாதம் முதல் தொடைகள் வரை மசாஜ் செய்தபோது, அவர் மணவியின் அந்தரங்கப் பகுதியைத் தொட்டதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.”
இந்த விவரங்களை மாணவி முதலில் தன் தோழிக்கு தெரிவித்ததாகவும், பின்னர் ஜூன் 30ஆம் தேதி மற்றொரு ஆசிரியரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
36 வயதுடைய குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர், ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளார்.
இந்த வழக்கு, 2017ஆம் ஆண்டின் “பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம்” (Section 14(a) Act 2017) கீழ் விசாரிக்கப்படுகிறது.




















