ஈப்போ,
பேராக் குடிநுழைவு துறையும், பொது நடவடிக்கை படையணியும் சேர்ந்து நடத்திய வெளிநாட்டவர்களை சோதனை செய்யும் நடவடிக்கையின் போது, ஒரு வெளிநாட்டு பெண் தனது கணவனையும், இரண்டு சிறு குழந்தைகளையும் விட்டு விட்டு ஓடிச் சென்று தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை, Persiaran Panorama Lapangan Perdana பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டட நிர்மாணப் பணித் தளத்தில் நடைபெற்றது. தப்பியோடிய பெண் சுலாவெசி (Sulawesi) நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.
“இந்தச் சோதனையில், 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 120 நபர்கள் குடிவரவு சட்டம் 1959/63 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.” என பேராக் குடிவரவு இயக்குநர் Datuk James Lee கூறினார்.
சோதனையின் போது, அந்த பெண்ணின் கணவர் மற்றும் 2 மற்றும் 3 வயதுடைய இரண்டு பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, கைது செய்யப்பட்டோர் உள்துறை வளாகத்துக்குள் அனுப்பப்படுவர் என்றும், அடையாளம் காட்ட முடியாத சிறுவர்கள் ஒரு சிறப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
“தொழிலாளர்களை நியமிக்க விரும்பும் தொழில்முனைவோர், நேரடியாக குடிநுழைவு துறையுடன் தொடர்புகொள்ள வேண்டும். நடுவர் அல்லது மூன்றாம் தரப்பு மூலமாக செயல்படுவது சட்டவிரோதமானது,” என்றார் Datuk James Lee.

















