ஈப்போ,
பீடோரில் உள்ள கம்போங் பெலகாங் பாசார் பகுதியில் உள்ள இருமாடி வீடொன்றில் .38 Smith & Wesson ரிவால்வர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 மற்றும் 46 வயதுடைய இரு சகோதரர்கள் நேற்று இரவு 9.20 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த வீட்டிற்கு விரைந்த போலீசார் அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்பின் .38 Smith & Wesson ரிவால்வர் துப்பாக்கி, நான்கு ரவைகள் மற்றும் சில பொருட்கள் மெத்தையின் கீழ் மறைக்கப்பட்டிருந்தன. வீட்டின் மேலும் கீழும் உள்ள வசிப்பறைகளில் குண்டு வெடித்தது போன்ற பல அடையாளங்கள் காணப்பட்டன,” என அவர் தெரிவித்தார்.
மேலும், இருவரும் முன்பு ஆறு குற்ற வழக்குகள் மற்றும் நான்கு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும், மேற்கொள்ளப்பட்ட போதை பாவனைக்காக பரிசோதனையில் ஒருவர் Methamphetamine பாவிட்டிருந்தது கண்டறியப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை தாப்பா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இருவரும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் உள்ள பொதுமக்கள், அருகிலுள்ள எந்த ஒரு போலீஸ் நிலையத்தையாவது தொடர்புகொண்டு அல்லது விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் நூர்பாரா இதாயூ மஸ்லானை 05-4011222 என்ற எண்ணில் தொடர்புகொள்ள போலீசார் கேட்டுள்ளனர்.
இந்த வழக்கு, 1971 ஆம் ஆண்டின் துப்பாக்கி (தண்டனை உயர்) சட்டத்தின் பிரிவு 8, 1960 ஆம் ஆண்டின் ஆயுத சட்டத்தின் பிரிவு 8(ஏ) மற்றும் பிரிவு 39 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.




















