கோலாலம்பூர்,
காஜாங்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் சக மாணவரை தாக்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளான நால்வர், (13 வயதுடைய மாணவர்கள்), போலீஸ் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் சந்தேக நபர்களுக்கான ரிமாண்ட் நாளை வரை நீட்டிக்கப்பட்டிருந்த போதிலும், விசாரணை மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Naazron Abdul Yusof தெரிவித்தார்.
“இதுவரை தாக்குதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களையும் உள்ளடக்கி ஒன்பது நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்,” என அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட மாணவரின் பேச்சு மற்றும் நடத்தை பற்றிய அதிருப்தி தான் தாக்குதலுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில், சக வகுப்பு மாணவர் ஒருவர், ஷாப்பிங் மாலில் தனது சக மாணவர்களால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் செய்தார். அவர் மருத்துவ சிகிச்சை பெற்றதுடன், சிறிய முகக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் 506 (காயம் ஏற்படுத்தல் மற்றும் மிரட்டல்) மற்றும் 1955 சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.





















