By: Chief Editor BR.Rajen
லங்காவி
Cili MARDI எனும் புது வகை மிளகாய் உற்பத்தியை மலேசிய விவசாய ஆராய்ச்சி, மேம்பாட்டு கழகம் (MARDI) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்புது வகை மிளகாய் உற்பத்தியானது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் முயற்சியில் மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

கெடா, லங்காவி Taman Agro Teknologi MARDI இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விவசாயம், உணவு பாதுகாப்பு உத்ரவாதம் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ இஷாம் பின் இஷாக் டிசம்பர் 8 ஆம் தேதி இதனை அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார்.
தீவிர ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்த மிளகாய்க்கு Cili MARDI என்று பெயரிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட Ch 234-14 (MC 11), Ch 231-5 ஆகியவற்றின் கலவையில் Cili MARDI உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.இது antraknos பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகும் என்றும் தெரிவித்தார்.
பயிரிடப்பட்ட 5 முதல் 6 மாதங்களில் ஒரு ஹெக்டருக்கு 20 முதல் 30 மெட்ரிக் டன் விளைச்சலை தர வல்லதாகும்.
மலேசியாவில் மிளகாய் விளைச்சலில் ஏற்பட்டிருக்கும் பிரதான சவாலை கலைந்து தேவையை நிறைவு செய்யும் ஆற்றலை கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி விதைகளை சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்வதற்கு இப்புது வகை உற்பத்தி வழிவகுத்துள்ளது.
நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒரு பகுதியாக இப்புது வகை மிளகாய் விளைச்சலும் இருக்கிறது என்று டத்தோஸ்ரீ இஷாம் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு விவசாயிகள் பயன்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் ஆதரவையும் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கெடா மாநில விவசாயம், தோட்டம், போக்குவரத்து துறை ஆட்சிக்கு உறுப்பினர் ஹாஜி டிஸோவாஹிர் பின் ஹாஜி அப்துல் கனி, மார்டி இயக்குனர் வாரியத் தலைவர் டாக்டர் அஸ்மான் பின் இஸ்மாயில், மார்டி தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் ஹாஜி முகமட் ஸபாவி பின் அப்துல் கனி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.






















