அலோர்ஸ்டார்,
லங்காவியில் பல வணிக நிலையங்களில் போலியான 100 வெள்ளி நோட்டுகளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லங்காவியின் சில பகுதிகளில் போலி நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக நான்கு புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றது என லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஷரிமான் அஷாரி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 8.30 மணியளவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில் 24 முதல் 36 வயதுக்குள் உள்ள ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களுக்கான ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில், அனைத்து சந்தேகநபர்களும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிலருக்கு போதை மற்றும் குற்ற சம்பந்தப்பட்ட முந்தைய குற்றச்செய்திகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அனைவரும் மூன்று நாட்கள், செவ்வாய்க்கிழமை வரை ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் (Kanun Keseksaan) பிரிவு 489B கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




















