உலக அரங்கில் மிகச் சுவையான உணவாக வாகை சூடியது மலேசியாவின் ரொட்டி சானாய்

கோலாலம்பூர்:

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் உலகக் கண்காட்சியில் மலேசிய உணவு ஒன்றை சுவையான உணவாகப் பலரும் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜப்பானின் யோமியூரி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு ஆய்வில் ரொட்டி சானாய் (பரோட்டா) மிகச் சுவையான உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இடமும் சவூதி அரேபியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் நாடுகள் கூட்டாக 3வது இடத்தைப் பகிர்ந்துகொண்டன.

சுவையான உணவைத் தேர்ந்தெடுக்கும் ஆய்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜப்பானில் உள்ள யுமேஷிமா தீவில் ஒசாகா கண்காட்சி 2025 ஏப்ரல் 13 முதல் அக்டோபர் 13 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களுடைய புத்தாக்கம், கலாசாரம், உலகச் சவால்களுக்கான தீர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் மலேசிய உணவுக்குக் கிடைத்த உலக அங்கீகாரத்தை முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் வரவேற்றுள்ளார்.

மலேசிய உணவு வகைகளும் மற்றும் விருந்தோம்பலும் உலக அளவில் மக்களை ஈர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஜப்பானில் மலேசியாவுக்கு முதலிடம், மலேசியா உணவு மிகவும் சுவையானது என நாம் சொல்லி வருகிறோம். இதனை ஒசாகா கண்காட்சிக்கு வந்தவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று வியாழக்கிழமை ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மலேசிய காட்சிக் கூடத்தில் இருந்த மலேசிய குழுவின் கடினமான உழைப்புக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

பறக்கும் ரொட்டி சானாய் மற்றும் பாரம்பரிய நடனம் அனைத்துலகப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கடந்த ஏப்ரலில் கண்காட்சி தொடங்கியதிலிருந்து மலேசிய கூடத்திற்கு 2.2 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

ஒரு ரொட்டி சானாய் ஐம்பது ரிங்கிட்டுக்கு (S$15.31) விற்கப்பட்டாலும் பலரும் வாங்கி சுவைத்தனர். ஒரு நாளுக்கு ஏறக்குறைய 1,500 ரொட்டி சினாய் விற்கப்பட்டு வருகிறது.

பல பார்வையாளர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று ரொட்டி சானாயை வாங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here